உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - சீர்காழி கோவிந்தராஜன்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்;
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை;
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!

என்று கம்பீரமாக ஆரம்பமாகும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஏதோ ஈர்ப்பு இளம் வயதிலிருந்தே தொடங்கிவிட்டது!


Photo Sharing and Video Hosting at Photobucket

காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கும் எங்கள் வீட்டு டேப் ரெக்காடரின் அபிராமி அந்தாதி, அந்த தெருவுக்கே பக்தி மணத்தை கமழச்செய்து கொண்டு செல்லும்! அந்த தெரிவில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் இருந்தாலும், ஒருவர் கூட வந்து இந்த விஷயத்தை குறையாகவோ அல்லது தொல்லையாகவோ கூறியது கிடையாது, என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

இத்தனைக்கும் பாடல் போடுவதுதான் அப்பாவுக்கு வேலை,டேப் பாட ஆரம்பித்ததும்,தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இவர் கிளம்பிவிடுவார் காளியாக்குடியை நோக்கி.!

அந்த நாள் தொடங்கி இன்று வரை அவ்வப்போது சீர்காழியின் குரலில் லயித்திருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது!

எத்தனையோ பேர் வந்தாலும், எத்தனையோ சாமிபாடல்கள் பாடினனலும் இன்றும் கோவில்களில் சீர்காழியின் பழைய பக்தி பாடல்கள்தான் ஒலிக்கின்றன! (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம்!)

லண்டனில் முருகன் கோவில் விழா கச்சேரியில் அவருக்கு அளித்த வரவேற்பு , அவர் பாடிய பாடல்கள், கண்ணதாசன் பிரத்யோகமாக எழுதிய,

உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த – தமிழன்
உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த –
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க...

கரகோஷத்தின் பின்ணணியில் இப்பாடலும், ஆங்கிலத்தில் முருகனை துதித்து பாடிய பாடலும், எப்போது கேட்டாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியை தூவிச்செல்லும்!

வருடந்தோறும் நடக்கும் தருமையாதீன குருபூஜை விழாவின் ஹைலைட்டான விஷயமே சீர்காழி கச்சேரிதான்!

சுற்றுவட்டாரத்திலிருந்து மதியமே வந்த மக்கள், தருமபுர வீதி ஒரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போது,சாலையில் புழுதியை கிளப்பிக்கொண்டு வரும் அந்த வெள்ளை அம்பாசிடார்!

சீர்காழி வந்துட்டாரு....!

காரை துரத்திக்கொண்டு, அவரை காண ஒடும், மக்கள் இன்னும் என் கண் முன்னால நினைவுகளில் நிழலாடுகிறார்கள்..!

தெய்வத்தமிழ் மன்றத்தில் தொடங்கும்,6.00 மணிக்கு தொடங்கும் கச்சேரி, 10.00 மணியை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும்.

இடையில் நேயர் விருப்பம் போல சீட்டுக்களில் வரும் பாடல்களும் உடனடியாக சீர்காழியின் குரலில் ஒலிக்கத்தொடங்கிவிடும்!

சின்ன்ஞ்சிறு பெண்போலே. .
வாக்குதரும் நல்வாழ்வுதரும்
திருச்செந்தூரில் கடலோரத்தில் ...
மயிலாக நான் மாறவேண்டும்
லார்டு முருகா லண்டன் முருகா.!

போன்ற பாடல்கள் வருஷா வருஷம் பாடினாலும் இந்த பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இன்று அவர் வாரிசு சிவசிதம்பரம் பாடும்போது கூட...!


எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும் கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நண்ப, பதிவுக்கு நன்றி.

சீர்காழியின் குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, தமிழைக் கையாளும் திறமை, இத்தனையும் பாராட்டத் தக்கது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் அருமையான குரல். அவர் பாடிய பல பாடல்கள் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

said...

வணக்கம்.

உங்களுடைய பக்கத்து ஊர்க்காரர் பற்றி பெருமையாக எழுதியமைக்கு அல்லது என்னுடைய ஊர்க்காரர் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி ;)

ரொம்ப வருடங்கள் சீர்காழி தோணியப்பர் கோவில் திருமுலைப்பால் திருவிழாவிலும்,சீர்காழி தவறாமல் வந்து இலவசக் கச்சேரி கொடுப்பார்.எளிமையான மனிதர் என்று பலரும் சொல்வார்கள். 'சீர்காழி என்றால்' ஞானசம்பந்தர், சீர்காழி மூவர் ஆகியோருக்குப் பின் எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது இசைமணியாகத்தான் இருக்க முடியும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராய் இருந்த அவருடைய அண்ணன், பள்ளியில் - தமிழ் வழி வகுப்பில் - அடுத்த வகுப்பில் படித்த அவருடைய அண்ணன் மகள், லோரியில் அடிப்பட்டு இறந்து போன அவருடைய அண்ணன் மகன் ராஜேந்திரன்,நாகேசுவரன் கோவிலருகே மிட்டாய் கடை வைத்திருந்த மற்றோரு இசைமணியின் அண்ணன் என 30 வருடங்களுக்கு முன்பான நினைவுகளை கிளப்பிவிட்டுடீங்க ஆயில்யன்.

மகிழ்ச்சியா,நெகிழ்ச்சியா அல்லது சோகமா, தெரியல..

நன்றி.

இப்படிக்கு

ஒரு மயிலாடுதுறை (மூங்கில் தோட்டத்திற்கு தெற்கே) மாப்பிள்ளை

said...

//ஒரு மயிலாடுதுறை (மூங்கில் தோட்டத்திற்கு தெற்கே) மாப்பிள்ளை//

எங்க ஊரு மாப்பிள்ளைங்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் ரெஸ்பெக்ட் உண்டு!


மூங்கில் தோட்டமா அப்படின்னா இன்னைக்கு வீட்ல எல்லோரும் சேர்த்து வாங்க! வரப்போற பதிவுக்கு

said...

அருமையான பதிவு.

சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலே அவர் ஏதோ ஒரு பக்திப் பாடலைத்தான் பாடுகிறார் என்று இளவயதில் எனக்கு ஒரு புரிதலைத் தந்தது.

அவர் பாடிய "திருப்பதி மலைவாழும் வெங்கடேசா, திருமகள் மனம் நாடு சீனிவாசா, ஏழு மலை வாசா" பாடலும், "விநாயகனே வினைதீர்பவனே" பாடலும் என்றும் என் நெஞ்சில் நீங்கா பாடல்கள்.

'ராமு' படத்தில் பக்திரசம் சொட்டவரும் 'கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான், ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்' பாடல் என் மனதைக் கவர்ந்த ஒரு evergreen பாடல்.

http://bharateeyamodernprince.blogspot.com/2007/04/blog-post_15.html