சுஜாதா - மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!


எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 1970-களில் தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோது, அவர்களில் இளம் தளகர்த்தராக சுஜாதா இருந்தார்.

சுஜாதா என்ற புனைபெயர், அவருடைய துணைவியாரின் பெயராகவே இருந்தபோதிலும் அதில் கவர்ச்சி மின்னியது. அவருடைய எழுத் தும் மின்னல், கதையும் மின்னல். மிகப்பெரிய தத்துவ விசாரங்களை யும், கள வர்ணனைகளையும் எழுதாமலேயே நாவல்களையும் சிறுக தைகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவர்.

பெண்களை வர்ணிக்க அவர் செலவிட்ட நேரமும் எழுத்துகளும் குறைவுதான் என்றாலும் வாசகனின் நினைவில் அவை புகுந்து கொண்டு இம்சை செய்த நேரங்கள் அதிகம். இளைஞர்கள் மட்டும் அல்ல யுவதிகளாலும் போட்டி போட்டு வாசிக்கப்பட்டவர்.

அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாது பெங்களூருவையும் தில்லியையும் (அதன் அஜ்மல்கான் ரோடு, எம்.ஜி. ரோடு மகாத்மியங்கள் உள்பட) வர்ணித்து காசு செலவில்லாமல் "காதல் ஷேத்ராடனம்' போக வைத்தவர்.

விமானம் எப்படி ஓடுகிறது, கம்ப்யூட்டர் எப்படிச் செயல்படுகிறது, ஹைஜாக்குகள் எப்படி நடக்கின்றன, கணினியின் கட்டுப்பாட்டில் எதிர்கால நகரங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நடைச் சித்திரமும், கடைசி பாராவில் கதையின் போக்கையே படு கிண்டலாக மாற்றிய முத்திரைக் கதைகளும் இன்ன பிற உத்திகளும் சுஜாதாவின் முத்திரைகள்.

பத்திரிகைகளில் எழுத தொழில்முறை எழுத்தாளர்கள் ஆயிரம் பேர், நமக்குக் கிடைத்த நல்ல உத்தியோகத்தில் நாலு நாட்டைப் பார்ப்போம், நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்ப்போம் என்று ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் நினைத்திருந்தால், நமக்கு "சுஜாதா'வின் அறிமுகமே கிட்டியிருக்காது.

எதற்காக எழுத வந்தாரோ, தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு எழுத்து விருந்து படைத்தார். அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்ட "மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்'.

(வாசிக்கலாமோ கூடாதோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கூட நாட்களிலிருந்து சுஜாதாவின் கதைகளை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் படித்து மகிழ்ந்திட்ட வாசகனின் கண்ணீர்த்துளி அஞ்சலி இது.)

நன்றி - தினமணி 28/02/08

(+) பின்னே (-) ம்

எங்கும்...!

எப்போதும்...!

எந்த செயலிலும்,

எந்த உறவிலும்,

எந்த தொடர்பிலும்,

எந்த பழக்கத்திலும்,

எந்த சூழ்நிலையிலும்,

+ களை பிரதிபலியுங்கள்

- களை மனத்துக்குள் வையுங்கள்

வளமான வாழ்வு

வாழ பழகுங்கள்

வாழ்ந்து பழகுங்கள்!

வாழ்ந்து பாருங்கள்..!!

போய் வருகிறேன்.!

துள்ளித்துடித்துக்கொண்டிருந்த போராட்ட இதயம், மெல்ல மெல்ல அமைதி அடைந்து கொண்டிருக்கிறது.

அவன் இந்த முடிவை விரும்பவில்லை

இந்த முடிவு அவனை விரும்புகிறது

அடர்ந்த காடும்,பசுமை நிறைந்த மரங்களும்,மணம் பரப்பும் மலர்களும்,சலசலவென ஒடிக்கொண்டிருக்கும் நதியும், அந்த நதியின் கரையிலுள்ள அழகிய சிறு இல்லமும்,அமைதியை நாடும் அவன் கண்களுக்கு தெரிந்துகொண்டிருக்கின்றன.

அவன் இனி,சுதந்திரம் நிறைந்தவன்.

அவன் இனி,தனி மனிதன்.

ஆனால்...

எந்த மூலையிலிருந்தாலும்,அவன் உங்களையே சிந்தித்துக்கொண்டிருப்பான்

பிரிவின் துயரம் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது

அவன் எப்போதும் உங்கள் நண்பன்

நிச்சயமாக அவன் உங்களை மறக்கமாட்டான்.

எப்போதாவது தற்செயலாக நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்,அவன் கண்களில் கண்ணீர் வரும்.

அந்த கண்ணீர்,அவன் மாறவில்லை என்பதைக் காட்டும்.

எந்த அமைதியிலிருந்து ஒரு நாள் அவன் தப்பியோடி வந்தானோ,அந்த அமைதியிடமே அவன் மீண்டும் போய் சேர்ந்துவிடுகிறான்.

உலகம் உருண்டை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

ஒவ்வோர் மனிதனும் தான் புறப்பட்ட இடத்திற்கு ஒரு முறை திரும்பி வருகிறான்.

பயம் பிறக்கவில்லை.

பழிபாவங்கள் தோன்றவில்லை.

பரபரப்பில்லை.

இங்கேயிருந்து அங்கே,அங்கேயிருந்து இங்கே என்று இதயம் ஒடவில்லை.

இன்றும் நாளையும் ஒன்றேபோல் தோற்றமளிக்கின்றன.

ஏறும் போது இருந்த மயக்கம் இறங்கும்போது இல்லை.

அது வேண்டும் இது வேண்டுமென்கின்ற ஆசை முடிந்துவிட்டால், வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது.

வெற்றிகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை வீழ்த்திவிடாதே!

தோல்விகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை துவள வைக்காதே!

ஆசைகளால் ஏற்படும் பரபரப்பில் ஏ,தெய்வமே என்னை ஆழ்த்திவிடாதே!

பயத்தால் ஏற்படும் கோழைத்தனத்தில் ஏ,தெய்வமே,என்னை பதுங்கவைக்காதே!

-கவியரசு கண்ணதாசன்

நன்றி :- வனவாசம்
வானதி பதிப்பகம்