Showing posts with label என் உள்ளத்தில். Show all posts
Showing posts with label என் உள்ளத்தில். Show all posts

தந்தையர் தினம்!

இன்று தந்தையர் தினம்!

நாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட..! நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்! அப்படி ஒரு பதிவிலிருந்து..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



அன்புள்ள அப்பாவுக்கு,

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை

பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்!


ரொம்ப நாளா மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருந்த கேள்வி!

எத்தனையோ நண்பர்களுக்கு,உடன் பணிபுரியும் சகாக்களுக்கு, நாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு உண்டு மகிழ்ந்ததுண்டு! ஆனால் நாம் நம் பெற்றோர்களின் திருமண நாள் அவ்வளவாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோமா?

சகோதர சகோதரிகளின் கல்யாண நாளினை கூட நாம் வெகு எளிதாக வாழ்த்து சொல்லி கொண்டாடும் மனநிலை பெற்றிருந்தாலும் கூட,

அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனநிலையுடன் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் எனக்கு தெரிந்த மட்டில் கொஞ்சம் குறைவுதான்!

இத்தனைக்கும் அது ஒன்றும் அவ்ளோ பெரிய தவறான விசயமும் கூட இல்லை! ஆனாலும் கூட ஏதோ மனதளவில் ஒரு கூச்சம்!

சொல்லுங்களேன்! எத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் தாய் தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறீர்கள்?

இது வரை எப்படியோ!? இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்! -

சின்ன சின்ன அன்பில்,வாழ்த்துக்களில்,மகிழ்ச்சிகளில் தானே, இனிய வாழ்க்கை இருக்கிறது!

கண்ணீர் துடைத்து..!



(சமீபத்திய ருஷ்ய - ஜார்ஜிய போரில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி!)


அறிமுகங்களுக்கு அவசியமில்லை!

அன்னிய எல்லைக்கு அப்பாலும் இருக்கின்றன கண்கள்!

இருந்தவைகளை இழந்து

இருப்பவைகளை தேடி, இருப்பவர்களின்

கண்கள் நோக்கி கண்களை காணும்

வாய்ப்பு கிடைத்தால்

கண்ணீர் துடையுங்கள்!

விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!

ஸ்கூல் நினைப்பு!


பள்ளி கூடத்து நினைவுகள் என்றாலே வரிசைக்கிரமமாக சொல்வது முடியாத விசயம்! (அப்ப ஆறாவது டீயுசன் போனோமா இல்ல 8 வது இங்கீலிஸ்க்காக டீயுசன் போனோமான்னு மனசுல ஒரு ஜெர்க்கு வரும்ல அதுதான் இது!)

ஆறாவதில் ஆரம்பிக்கும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஆசிரியரிடம் நாம் முதலில் வாங்கிய அடி அல்லது வாழ்த்து கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும்! (எனக்கு அடி வாங்குனது நல்லா ஞாபகத்துக்கு வருதுப்பா!)

ஒவ்வொரு வகுப்பிலும் வருடங்களை கழித்து மாறிச்சென்றது, மாறி செல்கையில் மறந்த நட்புகள்! சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! - அவ்ளோ ஞாபகம் இருக்காடா உன்கிட்டன்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு நான் எல்லாத்தையும் வீடியோ பைலாக வைத்திருப்பதால் இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!

அவ்வப்போது பீறிட்டு கிளம்பும் எண்ணங்களை நினைவுகளை சொல்லி கொள்ள அருகில் நண்பர்கள் கிடையாது என்ற காரணத்தினாலும், போன் போட்டு அழ,அல்லது சிரித்து மகிழ வாய்ப்புக்கள் மிக காஸ்ட்லியாக இருப்பதாலும், இருக்கவே இருக்கு இணைய தொடர்பில் நட்புகள் என்ற தைரியத்திலும், ஊர் உறவுகள் தங்கள் உணர்வுகளினை பகிர்ந்துக்கொள்ள ஒரு இடம் வலைத்துப்போட்டிருப்பதாலும் இனி அங்கு இருந்தப்படியே உங்களை அவ்வப்போது சந்திக்கிறேன் என்ற செய்தியோடு மீ த எஸ்கேப்பு!

சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

கோவையில் - ஒரு குழுமாய் இவர்களின் பணி!

ஒவ்வொரு நாளும் மாலை 8.00 மணிக்கு கூடும் இவர்களின் சேவை சிறப்பு வாய்ந்தது!

இவர்களின் இந்த சேவைக்கு விளம்பரமில்லை வெற்றுக்கூச்சல்கள் இல்லை ஏன் பெயரே இல்லை!

உறுப்பினர்கள் என்று யாரும் கூறிக்கொள்வதில்லை அன்றாடம் யாருமே வந்து இந்த சேவையினை செய்ய முடியும்!

யாரும் பிறரிடமிருந்து பணம் எதிர்பார்பதில்லை தம் பையில் இருந்தே பணத்தினை எடுத்து போட்டு செய்கிறார்கள்!

அடாது மழை பெய்ந்தாலும் கூட இவர்களின் சேவை தொடர்கிறது!

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் தொடங்கி, கோவை நகர்ப்புறங்களின் முக்கிய இடங்களில்,
வாழ்க்கையே வாழ்ந்து தொலைத்தவர்கள்,
வாழ்க்கையை தொலைத்து வாழ்பவர்கள்
வாழ்க்கையை விட்டு விலக நினைத்து தொலைந்துப்போனவர்கள்
என பலரின், ஒரு வேளை உணவுக்கு உதவுகிறார்கள் இந்த மனிதருள் மாணிக்கங்கள்!

ஒவ்வொரு முறையும் இது போன்ற மனிதர்களை பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும்,மற்றும் சாலையோரங்களில்லும் காணும்போது எனக்கு தோன்றிய வினாவுக்கு “இவர்களின் உணவு உறைவிடம் என்ன? இவர்களின் குடும்பம் இப்போது எப்படியிருக்கும்? “ என்ற வினாக்களின் உணவுக்கான விடையாக இது போன்ற சேவை மனிதர்களின் செய்திகளால் நிறைவுபெற்றாலும் பல கேள்விகள் பதிலின்றியே தொடர்கின்றன!

இந்த சேவைக்காக யாரிடமும் சென்று பணம் கேளாமல் தானாகவே முன்வந்து உதவுபவர்களின் நல் உள்ளங்களின் ஆதரவோடு செய்லபட்டுக்கொண்டிருக்கிறார்கள்! பெரும்பாலும் பல நல் உள்ளங்கள் தம் குடும்பத்தின் நிகழும் சுப நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக இந்த சேவைக்கென சிறிதளவும் பணம் கொடுத்தும் உதவிக்கொண்டிருக்கிறார்களாம்!

முன்பு நான் படித்த செய்தியும் பின்பு பிஐடியில நான் பார்த்திருந்த என்னை பாதித்த படத்தினாலும் கூட இந்த பதிவு ! - சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

ஏப்ரல் மாத போட்டியில் வெளியான கோமாவின் பதிவின் படத்தினை இத்துடன் இணக்கிறேன்!

அழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி!



மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "அவுஸ்திரேலியா"
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!
அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புழுதி மண்" வாசம்தான்!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!

ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.

என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!

என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பாயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"

என்ன வேண்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.


வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!

காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உணர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்,
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!

ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்கள் தாயகத்தில் தான்.

அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?

"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"
ஐயா...!
அழுதாலும் விளங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!



இன்று ஜூன் 20 - அன்னை மண்ணிலிருந்து வெளியேறி அடைக்கலமான மக்களினை பற்றிய செய்திகளை உலக்குக்கு சொல்லும் நாள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் தம் உறவுகளை உடைமைகளை விட்டு பிரிந்து, மற்றைய நாடுகளில் வாழ்ந்துவரும் எண்ணற்ற மக்களின் உணர்வுகளில் இருக்கும் தாய்மண்ணின் கனவுகள் நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்!

கவிதை ஆக்கம் :- தமிழ்பொடியன் @ தமிழ் சிட்னி

பரிந்துரை செய்த கானா பிரபாண்ணாவுக்கு நன்றி!

மேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்!

எப்பொழுதிலிருந்து என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவர மறுக்கிறது! ஆனாலும் கூட என்னோடான ஈர்ப்பு சரியாக மினிமம் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

நடுவில் சில காலங்கள் மேரியை காணாமல் நான் துடித்து போவதை பார்த்து மேரி ஒரு நாளும் கவலைப்பட்டதாகவே எனக்கு தோன்றவில்லை! தானுன்டு தன் பணி என்பதிலேயே மேரியின் குறிக்கோள் இருக்கும். இதைத்தான் நான் நேரிலேயே பார்த்ததுண்டு!

எனக்கு சிலசமயங்களில் மேரியை காணாமல் கடும் கோபம் கூட வருவதுண்டு அது போன்ற சந்தர்ப்பங்களில் மேரியின் மீதான கடுப்பு,கோபம், எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் குவித்தாகவேண்டுமல்லாவா? அந்த சமயங்களில் எங்கள் வீட்டு பிளாஸ்டி சேரின் ஒரு கால் ஊனப்படுத்தப்படும்!

எவ்ளோதான் அடிச்சாலும் தாங்கி கிட்டாண்டா! இவன் ரொம்ப நல்லவன்டா என்று நினைக்கும் மனது! கோபம் போன பிறகுதான் குணமே தன் நிலைக்கு திரும்பும் போல! - அப்போதும் கூட மேரி கொஞ்சம் மனதில் வந்து நிற்க கண்டு மகிழ்ந்தும்போவேன்!

ஏனோ தெரியவில்லை இந்த ஒரு வாரமாய் வலைச்சரம் கொஞ்சம் அதிக பிஸியோடு ஆர்வமாக மற்றவர்கள் பதிவுகளினை பதிவுகளை படித்து பதித்துகொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மிகுந்த ஆர்வம் + விருப்பம் உருவாகி ஒரு சந்தர்ப்பத்தில் மேரி மீது காதல் மீண்டும் எனக்குள் விஸ்வரூபம் எடுத்துவிட்டது !

இந்த ஒரு வாரமும் மேரியின் மீது கொண்ட அதீத காதல் என்னால் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோய் நானும் கூட கூடவே போய்விட்டேன்!

இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....!!!






(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே!)

கூர்க்கா!


நடுநிசிகளில் ஒலிக்கும் சைக்கிள் மணிகளின் சத்தத்தில் காண இயலும் இவர்களை! விசிலடித்துச்செல்கையிலேயே ஒவ்வொருவரி நிம்மதியான உறக்கத்தினூடாக தன் மாத சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லும் கூர்க்கா!

பெரும்பாலும் திரைப்படங்களில், வீடுகளின் வாயில்காப்பாளனாக வீட்டிருப்பவர்! தமிழ் திரைப்படங்களில் சேட்ஜிக்களுக்கு பிறகு இந்தி பேசியவர்கள் இவர்கள் மட்டும்தான்!

இது போன்று காட்சிப்படுத்தப்பட்ட கூர்க்காக்கள் உண்மையிலேயே வீர தீரத்துடன்,1850களிலிருந்து. ஆங்கிலேய ஆட்சியின் போதும் அதற்கு பிறகும் தற்போதும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்! கிட்டதட்ட 200 ஆண்டுகள் அயராத ராணுவ பணியில் தம் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது நேபாளம்!

சுதந்திரத்திற்கு பிறகான அண்டை நாடுகளுடனா போரில் மிகுந்த தீரத்துடன் போரிட்டதில் இவர்களுக்கு உள்ள பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

இந்திய ராணுவத்தில் தற்போது 7 கூர்க்கா படைப்பிரிவுகளில் இருப்பவர்களையும் சேர்த்து சுமார் 30000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்!

கூர்க்காக்களின் வாழ்க்கை இந்திய மண்ணில் இரு விதமாக உள்ளது ஒன்று அவர்கள் இந்திய மண்ணை நாடி வந்தவர்கள் மற்றொரு பிரிவினர் தாய் மண்ணை விட்டு வேலை தேடி இந்தியா வந்தவர்கள்! இந்திய நோபாள & பிரிட்டனின் முத்தரப்பு உடன்படிக்கையின் படி நேபாளத்து மக்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்!பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவரின் சமீபத்திய அறிவிப்பில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நேபாளத்து கூர்க்காக்கள் உடன் தங்களின் பணிகளை துறந்து தாய் நாட்டிற்கு திரும்பவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்!

மாவோயிஸ்ட் தலைவரின் அறிவிப்பின்படி இந்தியா பாதுகாப்பு படை பிரிவில் இருந்து கூடிய விரைவில் நேபாளத்து கூர்க்காக்களின் பிரிவுகள் விலகிச்செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிக இருக்ககூடும்! இதன் மூலம் நேபாளத்தில் கண்டிப்பாக வேலை வாய்ப்பு பிரச்சனைகள் அதிகரிக்ககூடும் ஆனாலும் மாவோ தலைவர்களின் தீர்மானத்திற்கு உடன்பட வேண்டிய சூழ்நிலைதான் இப்போது கூர்க்கா படைப்பிரிவில் இருப்பவர்களுக்கு!

இந்திய அரசோ அல்லது ராணுவ அதிகாரிகளோ இது வரையிலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக எந்த கருத்தினையும் தெரிவிக்காமல் அமைதி காத்துவருகின்றனர்.நிலைமை மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்...!

எங்கோ எப்போதோ படித்தது!

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!


எனக்கே எனக்காய் அதிகமாய் எடுக்கப்பட்ட பல ஜோடி நீலநிற செருப்புகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எனக்காக பட்ஜெட்டில் 15 ரூபாய் ஒதுக்கபட்டுவிடும்,அந்த காசினை கொடுக்கும் சமயங்களிலும் சரி,அதன் பின்னரும் சரி வரும் அட்வைஸ்களில் காலை தூக்கி நடடா! அதிகமாக இருக்கும்! - பிற்பாடுதான் உணர்ந்தேன் காலை தூக்கி நடக்க அதுவரையிலும் எனக்கு தெரிந்திருக்கவில்லை எதற்கு இரண்டு மாதத்திறகு ஒரு முறை எனக்கு 15 தேவைப்படுகிறது என்று!

ரோடு வலிக்க நான் நடந்தேனாக்கும் !

வெள்ளை நிறத்துடன் நீல நிற வாரினாலோ ஆனா அந்த ஜோடி ஹவாய் செருப்புகள் தான் இந்திய திருநாட்டில் இன்றும் பலருக்கு பாத காவலன் !

சிலருக்கு இது பாத்ரூம் செருப்பு என்ற வெறுப்பு கூட உண்டு ஆனால் அவர்களுக்கு தெரியாது இது கூட இல்லாமல் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இன்றும் உண்டு நம் நாட்டில் என்று..!

பள்ளிகளில் இலவச திட்டங்களில் பாத அணிகள் உண்டு என்றாலும் கூட அவரவர் அளவுக்கு வாய்ப்பது என்பது ரொம்ப கஷ்டம்தான். இன்னும் கூட நீஙக்ள் நம் பள்ளி குறிப்பாக கிராமங்களில் பல மாணவர்களும் செருப்பின்றி செல்வதை காண இயலும்! ஆள்பவர்கள் ஒருவருக்கும் கூட இதில் ஆர்வம் இல்லை ஒரு முறை காண்டிரக்ட் விட்டு கமிஷன் எடுத்துகொண்டால் எதையுமே கண்காணிக்கமாட்டர்கள் நம் தமிழ் அகத்து அரசியல்வாதிகள்!

வருடந்தோறும் இதன் தேவை அதிகரிப்பது ஏப்ரல் மற்றும் மே மாத காலங்களில்தான்! அதுவும் வெயில்காலத்தில் நம்மூர் சாலைகளில் போடப்பட்டிருக்கும் தாரினை நீங்கள் மொண்டு கூட எடுத்து செல்லலாம் அப்படியான ஒரு லட்சணத்தில்தான் நம்மூர் சாலைகள் பணி ஒப்பந்தகாரர்களின் செயல் இருக்கும் இந்த நிலைமையில், பாத அணி இல்லா பாதசாரிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்!

இது ”ரெண்டுக்கு” மேட்டர்

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது போன்ற விஷயங்களில்;

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது போன்ற காட்சிகளை;

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது நடைமுறை வாழ்க்கையினை;

ஆனாலும்,

இது தினமும் நடக்கிறது

இதில் தினமும் பயணக்கிறோம்

பலருக்கும் இதை காண்கையில் மனதில் கண்ணீரை இறைக்கிறது!

எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது!

இது கடவுளின் செயலினையொத்த பணி என்று கண்டும் காணாமலும் சென்றுகொண்டு இருக்கிறார்களோ...???

அவர்களும் மனிதர்கள்தான்!

அங்கு இருக்கும் உயர் அதிகாரிகளும் மனித இனம்தானே!

அரசியல்வாதிகளும் வந்துபோகும் இடங்கள்தானே?

ஏன் ஒருவரால் கூட மாற்றங்களை கொண்டுவரக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.....?

கருவின் குற்றமா? - சிசுக்கொலை


எவ்வளாவோ முயற்சிகள் மேற்கொண்டும், இன்னும் இந்த கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!

அழகிய பூவினை கொடுக்கும் அந்த செடிக்குள்ளும் ஒரு கொடூர விஷத்தைக்கக்கும் பாலைப்போல, இன்றும், அழகிய பூவினை பெற்றுக்கொடுத்து பின் அந்த பூவினை கொடூர மனத்துடன் விஷம் கொடுத்து கொல்லும் பெண் மனங்களும் உலாவிக்கொண்டிருக்கும் தேசமாகிப்போனது,நம் தேசம் என்பது சோகம்தான்!

கருக்கலைத்தல் மிகச்சிறிய வேலையாம்,ரிஸ்க் ஃப்ரீயாம்!டாக்டர்களுக்கு மிகப்பெரிய லாபமாம்..! என்ன மாதிரியான ஒரு சேவையினை சில டாக்டர்கள் செய்கிறார்கள் பாருங்களேன்..!:(

வருடத்திற்கு சுமாராக 11.2 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கொலைகள் மிகசர்வசாதாரணமாக நடைபெறுகிறதாம் இந்தியாவில்...!

சேலம் மாவட்டத்தில் மிகப்பிரபலமான விஷயமாக, இந்த சிசுக்கொலை விஷயங்கள் இன்னும் இருந்துவருகிறது! இத்தனைக்கும் அரசுத்துறையும்,அங்கு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இது தவிர தனியார் தன்னார்வ நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருந்தாலும்,கூட இந்த சிசுக்கொலைவிஷயத்தில் இருளில் அடைப்பட்டுதான் கிடக்கின்றனர் அனைவரும்!

சில பல இடங்களில் பொது விளம்பரங்களாக தெரியும் 500க்கு சிசுக்கொலை சாத்தியம்! இல்லையேல் கல்யாண செலவில் 50000 சத்தியம்! என்ற பயமுறுத்தல்களும், பொதுச்சேவையாக செய்யப்படும் வழக்கமும் உண்டாம்!

நமது சமூக,பண்பாடு மற்றும் இன்னபிற சமாச்சாரங்களில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பழங்காலத்தில் இருந்திருந்தாலும்,

இன்றைய நடைமுறை விஞ்ஞான வாழ்க்கையில், அஞ்ஞான இருளில் கிடந்து உழலும் பாமர மக்களின் அறிவை வளர்க்க வேண்டிய,

அக இருளை அகற்ற வேண்டிய கடமை அரசுக்கும் & ஊடகங்களுக்கும் தான் உண்டு !
ஆனாலும் அதைப்பற்றிய கவலை இன்றி அவைகளின் காலைகளும் மாலைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன!

காவியத்தில் மாலை சூட வேண்டிய சிசுக்கள்,

கல்லறை மாலை சூடி உறங்கிக்கொண்டிருக்கின்றன :(((((

பதி பசு பாசம்...!

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நில்லாவே.

என் கண்களில் அதிகம் தென்பட்ட வர்த்தையாக இது இருந்தது அடிக்கடி தருமபுரம் பக்கம் செல்லும் போதும் சரி மாத இத்ழாக வரும் ஞானசம்பந்தம் இதழிலிலும் சரி, இந்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்!ரொம்ப நாட்களாக இதன் அர்த்தங்கள் தெரியாது,யாரிடம் கேட்டாலும், நீயெல்லாம் சின்னபயடான்னு தான் பதில் வரும்( ஒரு வேளை அவங்களுக்கும் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்!)

பதி பசு பாசத்திற்கான விளக்கம் வெகுநாட்கள் கழித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.

பதி இறைவனையும் பசு எனப்படுவது ஆன்மா அல்லது

உயிரையும் பாசம் எனபது மலங்கள் என்று அழைக்கப்படும்

ஆணவம் கன்மம் மாயை குறிக்கும் சொற்களாம்ஒரு முறை இந்த பதிபசுபாசத்தொகையின் புத்தகம் எங்களின் பெரியப்பா வீட்டில் யாருக்கும் உபயோகமின்றி இருந்தப்போது அதை நான் எடுத்து வந்து படிக்க முயற்சித்து,முடியாமல் தனித்தனியாக டைரியில் எழுதி வைத்து, அப்போதும் அது சம்பந்தமாக சரியான விளக்கங்களுக்கு புரிந்து கொள்ள இயலாமல் விட்டுவிட்டேன்! அதிலிருந்து சில வரிகளாக சிற்சில பகுதிகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் ஆழ பதிந்து எண்ணங்களுக்கு விதையாகவும் அமையும்!

உதவி இரவி உலகுக்கு

இரவிக்கு உதவி செய்யுமோ உலகு

உலகத்திற்கே உதவும் சூரியனுக்கு உலகம் என்ன செய்யப்போகிறது? என்ற விடை தெரியாத கேள்விகள் சில வரிகளாக நிறைய உள்ளன.

பொதுவாக இது போன்ற புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே பீதி கிளம்பும்
இவர்களால் இயற்றப்பட்டு;
இவரது உரையுடன்;
இவரது திருவுளப்பாங்கின்படி;
இவரால் பரிசோதனை செய்யப்பட்டு;
இவர்களால்,
இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது .
இவை அனைத்தையும் படித்து முடிக்கும் முன்பே அலுப்பு வந்து புத்தகம் திரும்பவும் ஒரு மூலைக்கு போய் விடும்!

ஆனாலும் கூட இது போன்ற புத்தகங்களை படிப்பதன் மூலம்தான் பழந்தமிழ் மொழி சம்பந்தமான,நிறைய சொற்களை தெரிந்து கொள்ளலாம்!

முடிந்தால் முயற்சித்து பாருங்களேன்!

புலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1

பெரிய இரும்பு கதவுகளை கொண்டு அடைக்கப்பட்ட வாசல் நான் அந்த கதவுகள் திறந்திருந்து நான் பார்த்ததே கிடையாது ஒரத்தில் இருக்கும் சிறு கதவின் வழியாகத்தான் அங்கு தொழிலாளர்கள் வேலைக்கு உள் செல்வதை சில சமய்ங்களில் கண்டதுண்டு! (பட்! அந்த கதவு அடிக்கடி திறந்து மூடப்பட்டாலும், நான் தினந்தோறும் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமே மூடியிருக்கும்! அப்புறம்தானே ஆபிஸ் டைம் ஸ்டார்ட் ஆகும்!)

கம்பெனியின் இரும்பு கேட்டில் பதியும் பார்வை அதைத்தொடர்ந்து அங்கு அமைந்திருக்கும் குடேவுனின் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வழியாக பயணித்து,கண்கள் கூர்ந்து கவனிக்க,கால்கள் குத்திக்கொண்டு நிற்க செய்யும்படியான ஆர்வமூட்டும் அந்த பல கிளை மரங்களை கொண்ட தென்னை மரம்!

பள்ளிக்கூடம் போகமல் கட் அடித்த சந்தர்ப்பங்களில்,ஏண்டா ஸ்கூலுக்கு போனதானே படிச்சு பெரியவனாகி நல்ல வேலைக்கு போயி எங்கள காப்பத்த முடியும்னு! சொன்ன பாட்டியிடம்,நான் கஷ்டப்பட்டு புலிமார்க் சீயக்காய்தூள் கவர் ஓட்டியாவது உனக்கு சோறு போடறேம்மா என்று வீராப்பு பேசி பொழுதை கழித்த காலங்கள் கண்ணில் வந்து போகின்றன!

புலி மார்க் சீயக்காய் தூள் இல்லாத தீபாவளிங்கறது காவிரி கடைமடை மாவட்டங்களை பொறுத்த வரை நோ சான்ஸ்!

தீபாவளிக்கு முதல்நாள் இரவு, எல்லா பலகாரமும் செஞ்சாச்சான்னு கேட்கறத விட புலி மார்க் சீயக்காய்தூள் ரெடியாங்கற வாசகம்தான் பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும்!

தினமும் காலை 8.00 மணிக்கு அந்த மூன்று சக்கர சரக்கு வண்டியை எடுத்துக்கொண்டு நான்கு திசைகளை நோக்கி பயணிக்கும் அந்த மனிதர்கள் கிட்டதட்ட சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீக்கும் மேல் பயணித்து கிராமங்களில் ஊர்களில் உள்ள கடைகளுக்கு சரக்கு போட்டு, பிரபலமாக்கிய கம்பெனிதான் புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

வருட வருடம் வரும் புலி மார்க் மஞ்ச கலர் புத்தாண்டு காலண்டரிலும், நோட்டுப்புத்தகங்களில் ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் லேபிள்களாலும்தான் எங்களுக்கு மத்தியில் அதிகம் பிரபலமானது – புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

அப்புறமா! மீதி நினைவுகளோடு வர்றேன்......!

நன்றி சொல்லும் நேரம்...!

நன்றி சொல்லும் நேரம்!

நானாக நானிருந்த காலம் போய்,

வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;

வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்

ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்

நகர்ந்து விட்டது நாட்கள்!

தகர்ந்து விட்டது தமிழ்மணம் நட்சத்திர ஆசை!

நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம்தான்

எல்லோருக்கும் உண்டு.!

நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!

நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!

நகர்வு இருக்க வேண்டும்

நன்மை செய்யும் நகர்வாகவே..!

என் நகர்வு வரும் நட்சத்திரப்பயணிக்கு,

நலமாக அமையவேண்டும்!

நாளும் நல்லது சொல்வோம்

நாளும் நல்லது செய்வோம்

நாளும் நலமுடன் வாழ்வோம்!

நாளும் நல்லவராக வாழ்வோம்!

நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!

பொல்லா வினையே...!

எண்பதுகளின் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களை மறக்க முடியாது. ஒரு கையில் பூக்கூடையும் இன்னொரு கையால் எனது கரத்தையும் இழுத்துப்பிடித்தவாறே முன்னே நடப்பாள். தருமபுர மடத்துக்கு வடக்கே முழுங்காலை தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியில் முதலில் என்னை குளிப்பாட்டி கரையில் உட்கார வைத்துவிட்டு கழுத்தளவு தண்ணீரில் கால் கடுக்க காத்திருப்பாள். வழக்கம்போல் லேட்டாக வந்து தீர்த்தம் கொடுத்த சாமி சீக்கிரமாக திரும்பிப் போவதற்குள் மூங்கில் பாலத்தின் மேலேறி ஈரத்துணியை இழுத்துப்பிடித்தவாறே கருங்குயில்நாதன் பேட்டை நோக்கி நடக்கும் பாட்டியின் உள்ளங்கையிலிருந்த அதே ஜில்லிப்பு, காவிரிக்கரையோரம் அவளின் கடைசிப் பயணத்திலும் இருந்தது.

'பாட்டி' என்று யாரும் விளித்தாலும் என் பாட்டிக்கு பிடிக்காது. பாட்டி என்று இப்போது நான் எழுதுவது கூட இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் என்பதால்தான். ஒன்று, பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது. இரண்டாவது அப்படியே பாட்டி என்று எழுதியிருந்தாலும் திரும்பி வந்து கோபித்துக்கொள்ள முடியாத இடத்திற்கு போய்விட்டவள் அவள். நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அவள் 'அம்மா'தான். உண்மையில் ஒரிஜினல் அம்மாவை விட ஒரு ஸ்தானம் மேல். குடும்பத்தை துரத்திய வறுமை காரணமாக பதினாலு வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு பத்தே வருஷத்தில் அந்த வாழ்க்கையையும் பறிகொடுத்துவிட்டு ஒரே பெண்ணை படிக்க வைத்து டீச்சராக்கியதையெல்லாம் பாட்டி எப்போதே மறந்துவிட்டிருந்தாள். பாட்டியை பொறுத்தவரை கடந்த முப்பது வருஷங்களில் நடந்து நிகழ்வுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். சினிமா, டி.வியை விட மூன்று பேரப்பிள்ளைகளையும் சுற்றி சுற்றி வந்து பார்த்துக்கொள்வதுதான் அவளின் பொழுதுபோக்கு. ஐந்து மணி அடித்ததும் தெருவை வெறித்தபடி வாசலில் காத்துக்கிடப்பாள். எல்லோரும் வந்து சேர எட்டு மணி ஆனாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகரவேமாட்டாள்.

பாட்டிக்கும் பேரனுக்கும் பிடித்தமான பிள்ளையார் கோயில் அது. தருமபுர மடத்தில் ஞானசம்பந்தம் பிரஸ் நடத்திக்கொண்டிருந்த தனது கணவர் எப்போதும் உட்கார்ந்திருக்கும் அந்த பிள்ளையார் கோயில் வாசலை ஐம்பது வருஷமானாலும் பாட்டியால் மறக்க முடியவில்லை. தருமபுரம் வரும்போதெல்லாம் பிள்ளையாருக்கு விசேஷ கவனிப்பு உண்டு. அளவுக்கதிகமான அக்கறையும் அன்பும், எரிச்சலை கொண்டு வரும் என்பதை பாட்டி உணரவேயில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் யாரும் ஏற்படுத்திக்கொடுக்கவேயில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் பாட்டியின் கடைசி அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும்போது அந்த குற்றவுணர்ச்சிதான் வதைத்தது. உடம்பு சரியில்லாத நாட்களில் பத்து நிமிடத்திற்கொரு முறை நெற்றியை தொட்டுபார்த்தவாறே பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கடைசிக்காலங்களில் ஒரு பத்து மணி நேரம் கூட பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளமுடியவில்லையா? என்கிற மனசாட்சியின் குரலை எதிர்கொள்ளும் திரணி எனக்கில்லை. ஆனால், பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையின் இருட்டு வேளையில் எந்த டாக்டரையும் தொந்தரவு செய்யாமலேயே காசி தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, சொந்த பந்தங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்போதே விழியோரம் ஒரு துளி கண்ணீரையும் மூக்கோரமாய் ஒரு துளி ரத்தத்தையும் சிந்திவிட்டு நிரந்தரமாக தூங்கிப்போனாள்.

'ஸார், சைஸ் ரொம்ப கம்மியா இருக்கே.. Resoultion பத்தலை. பெரிய சைஸ் படமா பிரிண்ட் எடுக்க முடியாதே...' கலர் லேப்காரன் சொன்ன வார்த்தைகளின் கூர்மை, ஆணியை விட நெஞ்சை அதிகமாகவே பதம் பார்த்தன. எத்தனையோ படங்களை எங்கேங்கோ போய் எடுத்து வந்திருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்த பாட்டியை குளோஸப்பில் எடுக்க மறந்தது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய மடத்தனம். இத்தனைக்கும் பாட்டிக்கு காமிராவை கண்டால் அலர்ஜி என்றெல்லாம் சொல்வதற்கில்லை. நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும். ராட்டிகளும் சவுக்கு கட்டைகளும் ஆக்கிரமிப்பதற்குள் பாட்டியின் சிதைந்து போன கால் கட்டைவிரல் நகத்தை வருடியவாறு நான் சமர்ப்பித்த அந்த அப்ளிகேஷனை ஆண்டவன்தான் பரிசீலிக்கவேண்டும்.

இது ஓரு மீள் பதிவு!

கடந்த வாரம் வரை என்னைப்பற்றி தெரியாது இருந்தவருக்கு,
நட்சத்திர வாரத்தின் முதல் நாள், என் பால்ய கால புகைப்படம் பார்த்த பின் வந்த முதல் மெயிலில் இருந்த வார்த்தை!

KEEP IT UP…! GO AHEAD

என் சகோதரன் ரஜினி ராம்கியிடமிருந்து...!

சிவபோக சாரம்


அவரவர் வினை வழியவர் வந்தன;
அவரவர் வினை வழியவர் வருபன;
எவர்ரெவர்க்கு உதவினாரே எவர்ரெவர்க்கு உதவிலரோ
அது அவர் நினைவது தமையுணர்வதுவே!

ஏதேது செய்தாலும்,
ஏதேது சிந்தித்தாலும்,
ஏதேது சொன்னாலும்,
மகாதேவா உன் செயலே!
என்று உன் அருளாலே உணர்ந்து,
உன் செயலே காண்கிறேன்!

தருமையாதீனத்தை உருவாக்கிய ஸ்ரீஞான சம்பந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட சிவபோகச் சாரம் என்னும் நூலிலிருந்துதான் மேற்கண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன!

அந்த கால தமிழில் தட்டுதடுமாறி, முழுவதும் படித்து முடிப்பதற்குள், தடுமாறி மிக கஷ்டப்பட்டு போய்விட்டேன்! ஆனாலும் ஒருவித ஆர்வம் ஈர்ப்பு அந்த எழுத்துக்களில் இன்னும் இருக்கின்றது!

சைவத்தமிழை அனைவரும் அறிந்துகொள்வதன் மூலம் நாம் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் அறிந்துகொள்வதோட் அரிய பல சிந்தனைகள் பொதிந்த செய்திகளை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்

இது போன்ற விஷயங்களுக்கு நாம் அதிகம் செலவளிக்கவும் தேவையில்லை, மிக மலிவான விலையிலேயே இது போன்ற பதிப்புக்களை, தருமபுரம் ஆதீனம் போன்ற சைவத்தமிழ் வளர்க்கும் ஆதீனங்களும், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகங்களும் அச்சிட்டு வெளியிட்டு வருகின்றன!

மேல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தொழில்நுட்ப துறைகளிலேயே தம் கவனத்தை செலுத்தி வரும் இக்காலகட்டத்தில்,இது போன்ற பழந்தமிழ் பாடல்களை,- வாழ்க்கை பற்றிய பாடங்களை - தெரிந்து, அறிந்து, புரிந்துகொள்ள முயற்சிகள் ஏதுமின்றி தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறோம்!

எங்கள் ஊரில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் கண்டிப்பாக தருமபுர ஞான சம்பந்த பதிப்பகமும், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகமும் தம் சைவதமிழ் திருமுறை நூல்களை பதிப்புகளை பார்வைக்கு வைக்கும் (ஆம் பார்க்க மட்டும்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள் அதுவும் வழவழப்பான அட்டையுள்ள நூல்கள்தான் அவர்களுக்கு பார்க்க, வாங்க ரொம்ப விருப்பமாக உள்ளது)

தற்போதைய சுழல் தமிழ் பாடங்களை மேல் படிப்பில் எடுத்து படிப்பதென்பது,குறைவாகி,தாழ்வாகியும் போய்விட்டது! கல்லூரியில் தமிழ் மாணவன் என்றால் ஏளன பார்வையோடு என்ன வேலை கிடைக்கும் என்ற கேலிப்பேச்சுகளே பிரபலமாகி வருகின்றன! கல்லூரிகளில் தமிழை விட கணிப்பொறி அறிவியல்தான் மிக முக்கியத்துவமானதாகிவிட்டது!

தமிழ் சொற்பொழிவுகள்,கருத்தரங்குகள் குறைய தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம்! இலக்கிய விழாக்களென்றால் காத தூரம் ஒடுகிறார்கள் மாணவர்கள்..!

மாணவர்களை ஈர்க்கும்படியான முயற்சிகளோ, நடவடிக்கைகளோ இதுவரையில் செயல்படுத்தபடாத நிலை கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது!

மயிலாடுதுறை பெரிய கோவில்


என்னதான் வேலையாயிருந்தாலும் சரி, வெள்ளிகிழமையாச்சுன்னா சாயங்காலம் 7.00 மணிக்கப்புறம் பெரியகோவில்தான்! இரவு அர்த்த சாமம் முடியறப்பத்தான் முன்னாடிதான் வீட்டுக்கு ரிடர்ன் ஆகறதே!

ஊரைச்சுற்றி பல கோவில்கள் உண்டு என்றாலும்,எனக்கு பிடித்த கோவில் எங்க ஊரு பெரிய கோவில்தான்!

மனசுக்கு சங்கடமா எதாவது நடந்துடுச்சா, நேரா கிளம்பி போய் சிவன் சன்னதியில் உட்கார்ந்தா உலகமே மறந்து உள்ளம் மகிழும்!

மத்த ஊர்கள்ல, சுவாமி பேரோட கோவில சொல்லி கூப்பிடுவாங்க! ஆனா எங்க ஊருல சாமிபேர சொல்லி கூப்பிட்டா பலருக்கு தெரியாது! பெரிய கோவில்ன்னு சொன்னிங்க, சன்னதி முன்னாடி கொண்டு போய் விடுவாங்க!

இரண்டு பெரிய திருக்குளங்கள் கோவில் உள்ள இருக்கற குளத்துக்கு பிரம்ம தீர்த்தம்ன்னு பேரு!

படிக்கற காலத்துல கொஞ்சம் டல்லாயிடுச்சின்னா தம்பி! போய் குளிச்சிட்டு வந்து படின்னு சில இடங்கள்ள சொல்லுவாங்க அப்பத்தான் கொஞ்சம் ஃபிரஷ் ஆகும்னு அதுபோலத்தான் பிரம்மா ரொம்ப டயர்டாகி இருக்கறப்ப்ப, பார்முலா மாற ஆரம்பிச்சதும் எல்லாரும் உஷாரகி, யப்பா பிரம்மா போயி, மாயவரத்துல, டேக் பாத்! தென் யூ வில் கம் டூ ஸ்டார்ட்ன்னு சொல்ல அப்புறம்தான் எல்லாம் ஒ.கேயாச்சாம்!

கோவில் உள்ள நுழைஞ்சு இடதுப்புறத்தில் பிரும்மாண்டபமான வினாயகர் பேரு முக்குறுணி வினாயகர்! சங்கடஹர சதுர்த்தி அன்னைக்குத்தான் இவருக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்! மத்த நேரத்தில நாமதான் போய் நலம் விசாரிச்சிக்கிட்டு நல்லபடியா வையுப்பான்னு கோரிக்கை விட்டுட்டு வரணும்!

அப்படியே இடதுபக்கம் மதில் சுவர பார்த்தீங்கன்னா பெரிய எழுத்துக்கள்ல பெரிய கோவில பத்தி வரலாறு இருக்கும்! அதுக்கு பக்கத்துலதான் மடப்பள்ளி! (என்னது எழுத்து சரியா தெரியலையா???? சரி சரி வாங்க நானே சொல்றேன்.!)

சுவாமி பேரு மயூரநாதர்;
அம்பாள் பேரு அபயாம்பிகை தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் அது மட்டுமல்லாமல், அபயாம்பிகை சதகம் என்னும் 100
பாடல்கள் அம்பாளை துதித்து பாடப்பட்ட ஸ்தலம்!

மயூரநாதஸ்வாமி கோவில் சன்னதிக்கு உள்ள நுழைஞ்சதும் நம்மை வரவேற்கும் அந்த பெரிய உண்டியல்! அதுக்கும் நேர் மேல உச்சியில பார்த்தீங்கன்னா வட்டமாக அனைத்து ராசிகளின் உருவம் செதுக்கி அமைந்திருப்பார்கள்! எந்த ராசிக்கு நேர் கீழ நின்னு சுவாமியை பார்த்தால் விசேஷம்ங்கறது பெருசுங்க சொல்ற மேட்டர் அதனால அதையும் ஃபாலோ பண்ணிப்போம்!

அப்படியே இடதுபுறமா நேர பார்த்தீங்கன்னா மயில் உருவம் ஒரு சின்ன அறையில இருக்கும் அதுதான் மயிலம்மன் இப்ப நடந்துக்கிட்டிருக்கற ஐப்பசி உற்சவத்தில ஒரு நாள் மயிலம்மனுக்குன்னு ஸ்பெஷல் பூஜை உண்டு! அன்னைக்கு மயிலம்மன் தூக்கிட்டு எங்க இளவட்டங்கள் ஆடுற ஆட்டத்த போய் பார்த்தீங்கன்னா சூப்பரா இருக்கும்! மயிலம்மன் ஆட்டம்ன்னு இடமும் வலமும் முன்னும் பின்னுமாக பல்லாக்கில் வைத்து ஆடி வருவார்கள்!

தொடரும்....!

அவ்ளோ சீக்கிரத்தில சுவாமி தரிசனம் முடிஞ்சுடுமா? கடைமுகம் வரைக்கும் கொண்டுப்போய்த்தான் முடிக்கணும்னு!

ஆண்டவன் சொல்றான் இந்த ஆயில்யன் முடிப்பான்!?

(பார்ட்டு பார்டா போடறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு!?!)

மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 3 )

கொள்ளிடம் வாசன் எங்க ஊரு ஆளுதான் இவரும்னு சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமைதான்! 2003ல் வலைபதிவை துவங்கியவர்! உண்மையில் நான் கடந்த ஜுலை மாதத்தில்தான், தெரிந்துகொண்டேன்!அதுவும் அடிக்கடி தமிழ்மண உதவிக்கு சென்று வரும்போது கண்ணில் பட்ட இவரது பக்கத்துல, போய் பார்க்கும்போதுதான் தெரியும் சீனியர் பார்ட்டின்னு! (வலையுலகத்துக்குதாங்க!)

இதுவரைக்கும் நான் சொன்ன எங்க ஊருக்காரங்க திரும்பவும் தங்களோட பதிவுகளை துவக்கி கன் டினியூ பண்ணணும்ன்னு ரொம்ப ஆசையா கேட்டுக்குறேன்!
படிக்க ஆர்வமாகவும் இருக்கிறேன்!

அடுத்து அடிக்கடி வந்து அசத்திகொண்டிருக்கும் பதிவர்கள்

அபி அப்பா இவரைப்பத்தி நான் சொல்றதுக்கு என்னயிருக்கு! அதான் உலகமே சொல்லுதே! ஒவ்வொரு பதிவுக்கும் கலக்கல் காமெடி கன்பார்ம்ன்னு! மனுசன் பாருங்க பாரின்ல இருக்கோமென்னு கொஞ்சம் கூட கவலையே இல்லாதவரு மாதிரி ரகளை கட்டி அடிக்கிறாரு! (இந்த மாதிரி இருக்கறதுக்கும் சூழ்நிலை அமையணும்ங்க!)எப்படா இவரு போஸ்ட் வரும்னு நான் காத்திருக்க ஆரம்பிச்சது, இங்க நான் நெட் கனெக்ஷன் எடுத்த மே மாசத்திலேர்ந்து!படிக்கற வயசுல, நான் பரீட்சைக்கு படிக்கும்போதுதான் புல் நைட் ஸ்டடி பண்ணுவோம்! முதன் முதலா இருக்கற எல்லா பதிவுகளையும் படிக்கணும்னு பிலாக் ஸ்டடி பண்ணது இவர் பிலாக்தான்! குரங்கு ராதா மேட்டரும் சரி! (ஹைய்யா! எனக்கு தெரியுமே அந்த ராதாவ.!) இப்ப வந்த நீயெல்லாம் பொம்பளையாவும் சரி சூப்பரப்பு..!

உஷா ராமச்சந்திரன் அட இவங்க எங்க ஊரு மருமகப்பொண்ணுன்னு! இவங்க பதிவையும் + கமெண்ட்ஸ் வைச்சுத்தான் கண்டுபுடிச்சேன்ங்க! ரொம்ப காலமா, தமிழ் மணத்திலேயும், திண்ணையிலயும் எழுதிக்கிட்டு வர்றாங்க! அப்பப்ப நாட்ல நடக்கற விஷயங்கள பத்தி கொஞ்சம் நகைச்சுவை பூ தூவி பரிமாறிக்கிட்டிருந்தவங்க! இப்ப வர்ற பதிவெல்லாம் கிண்டல், நகைச்சுவைன்னு தூள் கிளப்ப ஆரம்பிச்சிருச்சி! அதுவும் இப்ப சமீபத்திய ஹிட் நட்சத்திரம் ஆனேனே! அப்புறம் பிலாக்கோபோபியா...! (ரொம்ப யோசிச்சிருப்பபங்க்ளோ!)
ஒரு தடவை எலுமிச்ச சாதம் பத்தி போட்ட பதிவ பார்த்து, நானும் செய்யலாம்ன்னு டிரைப்பண்ணி, புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கிட்ட கதையாகிபோனேன்!

இவரின் கிழவி கதை படித்து நான் என் பாட்டியை நினைத்து அழுத நாட்கள்! இன்றும் அடிக்கடி என்னை அந்த கதை உள்ள பகுதிக்கு சென்றுகொண்டுதான் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்!

முத்துலெட்சுமி- எங்க ஊரு கவிதாயினி அக்கா முதல்ல பிடிச்சது அட்டகாசமான வரிகளில், தப்பு கணக்கிட்டு நாம் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கு அமைப்புக்கேற்றப்படி அப்போதைக்கு அப்போதே அளிக்கும் விளைவு! இதை உணராதவர்கள்தான் கன்னத்தில் கை வச்சுக்கிட்ட குந்தியிருப்பாங்கன்னு! கொடுக்கற மெசேஜ் சூப்பர்! கவிதைகளும் அதற்கேற்றார்போல படங்களும் நல்ல ரசனை அசத்துங்க அக்கா! அசத்துங்க ஊருக்கும் பெருமை சேருதுல..!!

இவர்களை தவிர்த்து இன்னும் சிலரில், ஆன்மீக உலகின் S.K , மற்றும் நடுவில லீவு விட்டு ரிடர்ன் ஆகியிருக்கும் சதுக்கபூதம் (இதுவரைக்கு பேர் காரணம் சொல்ல்வில்லைன்னு நினைக்கிறேன்!)

மயிலாடுதுறை மண்ணிலிருந்து ஒரு PUSH கொடுத்து வெளிநாடுகளுக்கு பறந்து, அங்கிருந்துகொண்டே மண்ணின் மணம் முகர்ந்துகொண்டிருக்கின்றனர்! அவர்களில் சிலரது பதிவுகளுக்கு சென்றதுண்டு, சில இப்பத்தான் தெரியுது! நான் ஜுனியர்தானே அதனால் சீனியர்கள தேடி தேடி கண்டுபிடிச்சு, வணக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன்! என் நல்ல நேரம் என்னைய யாரும் இதுவரைக்கு கூப்பிட்டு வச்சு ராக்கிங் பண்ணலைப்பா அதுவரைக்கும் எஸ்கேப்...!!!

குறிப்பு:-அமீரகத்து குசும்பனும் மயிலாடுதுறைன்னு சொன்னாலும், ஐ.டி புரூப் காமிச்சாத்தான், ஒத்துக்கொள்ளப்படும் என்ற என் பிலாக்விதிப்படி, அபி அப்பாவை தகுந்த ஆவணங்களை பர்சனலாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது! (அப்புறம் இருக்குடி ராசா உனக்கு! – குசும்பன் வாரமே கொண்டாடி இன்டீரியர் & எக்ஸ்டீரியர் பண்ணிடுவோம்...! )

சத்துணவு ஆயா!

காலை உணவின்றி வந்து சேரும் ஆயாவுக்கு வேலை பள்ளியில் மதிய உணவு சமைத்தல்;

வீட்டைப்பற்றி எதுவும் கவலைப்படாமல், வருபவருக்கு வேலை பள்ளி முழுதும் கூட்டி சுத்தம் செய்தல்;

தன் பிள்ளைகளின் உணவு தயாரிப்பது கூட எல்லா பிள்ளைகளுக்கும் சமைத்து அவர்கள் சாப்பிட்டதும், தன் வேலையை முடித்தபின் தான் வீட்டுக்கு சென்று சமைத்தல்!

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று முழங்கி, அவர்தந்த உணவை எத்தனை நாள் முழுங்கியிருக்கிறேன்!

சம்பளமோ சாதரண தினக்கூலிக்காரர் வாங்கும் அளவுக்கூட கிடையாது..!

ஆனாலும் இவர்கள் எந்த நோக்கத்துக்காக இதை சேவையாக செய்கின்றனர்!

யாராவது நினைத்துப்பார்ப்பார்கள் என்றா? இல்லை ஆத்ம திருப்திக்காகவா?

புரியவில்லை! ஆனாலும் நினைத்துப்பார்க்கிறேன், சத்துணவு ஆயா வடிவில் இன்னுமொரு அன்னையை,

ஆத்ம திருப்தியுடன்..!!!

பில்டர் காபி? - இது துருக்கிஷ்ம்மா..!

சாதரணமா ஆபிஸ்க்கு, எதோ வந்தோமா எப்பவாவது டீ குடிச்சோமா, போனோமான்னுதான் இருந்துக்கிட்டு இருந்தேன்! கொஞ்ச நாள் வரைக்கும்!

ரமலான முடிஞ்சதுக்கப்புறம்தான், இந்த மிசிரிக்காரங்க,லாஸ்ட் 30 நாள்ல குடிக்க மறந்த டீ இன்ன பிற சமாச்சரங்கள் கேட்டு, வாங்கி அடிச்சு, தள்ளிக்கிட்டிருந்தாங்க!

நான் மட்டும் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேனா? நாமளும் ஸ்டார்ட் பண்ணுவோம்னு ஆரம்பிச்சதுதான்!

டீ பாய்க்கிட்ட மாமு..! எப்பவும் குடுக்கற டீ வேணாம் வேற எதாவது ரெடி பண்ணி எடுத்துட்டு வான்னு சொல்லி அடுத்த பத்தாவது நிமிசம் இந்த துர்க்கிஷ் காபி கொண்டு வந்தாப்ல.., வந்த வாசமோ காபிடா காபிடான்னுன் மனசு அடிச்சிக்குது!


அய்யோ காபியேதாங்க! வாசனை வைச்சே ஆஹா நாம தேடி அலுத்து போன ஐட்டம்டான்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்! டக்குன்னு எடுத்து வாயில் வைக்கப்போன என்ன டீ பாய் தடுத்து கொஞ்சம் பொறுங்க அஞ்சு நிமிஷம் கழிச்சு குடிங்கன்னு சொல்ல, மோப்பம் புடிச்சிக்கிட்டே இருந்தேன்!
ஆரம்பிச்சிட்டேன்...!

காப்பி தூளை போட்டு நல்லா கொதிக்கவைச்சு அப்படியே கருப்பு கலருக்கு வந்தப்புறம், அப்படியே எடுத்து ஒரு ச்சின்ன கப்ல ஊத்தி,டேபிள கொண்டாந்து வைக்கும்போது, கிளம்புற காபி வாசனை என்னைய மயூரா ஹோட்டல் டபுள் ஸ்ட்ராங் காபிய ஞாபக்ப்படுத்திக்கிட்டே இருக்கும்! என்ன ஒண்ணு பால் மட்டும் மிஸ்ஸிங்!!

நான் நினைச்சத விட பல மடங்கு ஸ்ட்ராங்காவே, எனக்கு கிடைச்சிடுச்சிங்கோஓஓஒ.....!

(எங்க ஊர்க்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த விஷயத்தை எங்க வீட்ல சொல்லிப்புடாதீங்க! தலை வெள்ளையா போயிடும்டா வேணாம்டா ராசான்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க....!!!! )