
வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!
வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!
எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!
கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!
சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?
ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!

கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!
ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!




