சிட்டுக்குருவிகள்


நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.

சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.

சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில் கூடுகட்டி கீச்...கீச்... என்று சத்தமிட்டபடி அங்கும் இங்கும் வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும் சிறிய குருவிகள் இன்று எங்கே போய்விட்டன?

சுற்றுச்சூழல் மாறுதல்களால் நம் எதிர்கா லச் சந்ததியினருக்கு பல இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிட்டுக் குருவி இனமும் ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வில்லாமல் பல விஷயங்களால் நாம் கண்டுகொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் நமது கட்டட அமைப்புதான். வீடுகளில் உத்தரங்கள், காற்று துவாரங்கள், ஓட்டு வீடுகளில் ஓடுகளுக்கிடையே உள்ள சந்துகள் சிட்டுக் குருவிகளின் வாழ்விடமாக இருந்தன.

தானியங்களைப் புடைக்கப் பயன்படுத்திய முறங்களில் இருந்து விழும் குறுநொய், வீட்டு முற்றங்களில் பாத்திரங்களைக் கழுவும் போது அவற்றில் எஞ்சியிருக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு குருவிகள் உயிர் வாழ்ந்து வந்தன.

உடலுக்கு வலிமை தரும் அந்த தானியங்களைச் சாப்பிடுவது குறைந்து பீசா, பர்கர், ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு நாம் மாறிவிட்டோம்.

கல், குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி, கோதுமை என்றாகிவிட்டது. வீட்டுச் சமையல் அறைகளில் இருந்து சோற்றுப் பருக்கைகள் "சிங்க்' மூலம் நேராக பாதாள சாக்கடைக்குப் போய்விடுவதால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு என்பதே கனவாகிவிட் டது.

உணவு, வாழ்விடம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இவை குடிபெயர்ந்து விட்டன. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இக்குருவிகள் ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்டு முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது. வீடுகளில் உள்ள சந்து, பொந்துகளில் அருகம்புல், வைக்கோல், குப்பைகளில் உள்ள நார்க்கழிவுகள், பஞ்சு போன்றவற்றை திணித்து அவற்றில் முட்டையிடும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும். முருங்கை, கருவேலமரம், அவரைக் கொடி, பூசணிக்கொடியில் உள்ள புழுக்கள் மட்டுமே சிறிய குஞ்சுகளுக்கு உணவு. புழுக்கள் உருவாகும் செடிகள் நகரத்தில் இல்லாமல் போய்விட்டன.

சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்.

நன்றி - தினமணி

நன்றி - தினமலரில் இன்று 20.03.2010 வெளியான செய்தி

சிட்டுகுருவிகள் விஷயத்தில் நம் நடவடிக்கைகள் எல்லாமுமே மாறி விட்டன! தெருக்களில் விளையாட்டின் போது அல்லது விளையாட்டே சிட்டுகுருவி காண்பது என்றிருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன! நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தீமைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது! தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாஸ்.. சிட்டுக்குருவி லேகிய மகிமைக்காகத் தான் நிறைய பேரு அதைக் கொன்று தின்னு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. :(

said...

சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்]]


நெகிழ்வாய்...

---------------------

பாஸ் எல்லோரும் பிரச்சனையை மட்டுமே சொல்றோம்

தீர்வு எதுனா !!!

said...

அவ்வ்வ் தாடிக்காரரே பாஸ் எம்புட்டு ஃபீல் பண்ணி பதிவு போட்டா சிரிக்காம கலாய்ச்சிருக்கீரே

said...

நல்ல பதிவு பாஸ்

said...

ஒரு எளிய தீர்வு உண்டு, தினமும் நாம் காலை உணவு உண்ட பிறகு, ஒரு கைபிடி அரிசியை வீட்டுக்கு வெளியில் தூவலாம். தினமும் நான் செய்துவருகிறேன்.

said...

நிஜம்தான் பாஸ்,

உத்திரம், காற்று வர க்ராந்தி வைத்துக்கட்டுவது இதெல்லாம் இல்லாம போக இன்னொரு காரணம் அப்பார்ட்மெண்ட்களின் எண்ணிக்கை அதிகமானது. தனிவீடு என்பது கனவில்தான் சாத்தியம். :(

Anonymous said...

குருவிகளுக்கு இத்தனை பிரச்சனையா!! பகிர்விற்கு நன்றி.

said...

நல்ல பகிர்வு அண்ணே ;)

said...

நல்ல பகிர்வு சின்னப்பாண்டி, ஆனா ஒரு சந்தேகம் ட்விட்டரில் தான் RT என்றால் பதிவிலுமா அவ்வ்வ்

said...

டோட்டோ பறவை, சிட்டுக்குருவி, கோலாக் கரடி

தேசம் தோறும் தத்தம் பங்குக்கு ...

நல்ல பதிவு ஆயில்யன்

said...

சிட்டுக்குருவிகளின் துறுதுறுப்பும் அதன் முகங்களில் தெரியும் வெகுளித்தனமும் வேறெந்த பறவைக்கும் கிடையாது. மரங்களை அழித்துப்பறவைகளை இழந்து வருகிறோம்.நல்ல பதிவு ஆயில்யன்.

said...

நல்ல பதிவு பாஸ்

நல்லாதான் ஃபீல் பண்ணுறீங்க‌

said...

எங்க ஊர்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருக்கு. ஆனா ரொம்பவே குறைஞ்ச எண்ணிக்கையில்தான் இருக்கும் :(. எப்பாவது ஒண்ணோ ரெண்டோ கண்ணுக்கு தட்டுப்படும்.

Anonymous said...

நகரமயமாதிலின் விளைவு.

said...

ரொம்ப நெகிழ்வான பகிர்வு ஆயில்யன்.

சின்ன வயசில் அம்மாச்சி வீட்டுக் போகும் போது படை படையாய் அப்புகிற சிட்டுக் குருவிகளை பார்த்திருக்கிறேன்.அதே ஊரில்தான் நானும் திருமணம் செய்திருக்கிறேன்.எங்கடா போச்சு அந்த குருவிகள் எல்லாம் என்று மாமனார் வீட்டு சாப்பாடு முடிந்து தம் அடிக்கும் பொருட்டு வெளியில் வரும் போது யோசித்தது உண்டு.

இப்போ இதை வாசிக்கும் போதுதான்,தோனுகிறது...

எவ்வளவு தள்ளி வந்துட்டோம் என.

இப்படி எவ்வளவு மறக்கிறோம்.இழக்கிறோம்.

said...

//தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???
//

உண்மைதான். எங்கள் வீட்டில் அம்மா, குருவிகளுக்காக நெல்கதிர்களை வாசற்காலின் ஓரத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள். அதிசயமாய் நகரத்துல் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளின் கிச் கிச் சப்தங்களை கேற்க்கலாம்.இப்போதெல்லாம் நான் வீட்டுக்கு போன் செய்யும்போது, குருவிகள் சப்தம் போனில் கேற்கிறதா என தம்பியும், இப்போது எத்தனை குருவிகள் உள்ளன என நானும் கேற்பது வழக்கமாகி விட்டது.

இயற்கையை ரசிக்கும் உங்கள் இயல்புக்கு பாராட்டுக்கள் ஆயில்யன்.

Anonymous said...

சிட்டுக்குருவு ரொம்பவே க்யூட்... நீங்க எடுத்த படம்தானே :-)

said...

/புனிதா||Punitha said...

நீங்க எடுத்த படம்தானே :-)//

இல்ல பாஸ் !

said...

இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே புனிதா.../Blogger புனிதா||Punitha said...

சிட்டுக்குருவு ரொம்பவே க்யூட்... /

அப்போவே தெரிஞ்சிருக்க வேண்டாமா?! :-))

said...

20.3.2010 உலக வீட்டு சிட்டுக் குருவிகள் தினம்.

அடைக்கல குருவி என்று அழைக்கப் படும்,இந்த சிட்டுக் குருவி
வீடுகளில் இருந்தால் நல்லது, அதன் கூட்டை கலைக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

எங்கள் வீட்டு பீரோகண்ணாடியை வந்து வந்து கொத்தும்,அந்த குருவியின் அலகு வலிக்கும் கொத்தும் போது என்று கண்ணாடிக்கு கற்றன் தைத்துப் போட்டார்கள் அம்மா.

டெல்லியில் இந்த குருவி என் மகள் வீட்டு பால்கனியில் முன்பு நிறைய இருக்கும், இப்போது அளவு குறைந்து வருகிறது.

பூச்சி கொல்லிகள் தெளிக்க படுவதால் அதற்கு உணவு நஞ்சாகி விடுகிறது.
செல்போன் டவ்ர்களின் கதிரியக்கத்தால்
முட்டைகள் பொறிப்பதில்லை.
வாகன இறைச்சல் இவை அதற்கு
ஆகாதவை.என்னசெய்வது? தெரிந்தே தவறுகளை செய்கிறோம்.

//தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப் பட்டு,அழிக்கப்பட்டு வருகினறனவோ//

ஆம் ஆயில்யன்,தெரியாமல் எத்தனையோ!

பகிர்வுக்கு நன்றி.

இன்று வனப்பாதுகாப்பு நாள்.
காடுகளை காப்பாற்றி புவி வெப்பத்திலிருந்து உயிர்களை காப்பாற்றுவோம்.
வாழ்க வளமுடன்.

said...

பாஸ்..நான்கூட தலைப்பைப் பார்த்து கேரளாக்குருவியோன்னு நினைச்சுட்டேன்...அவ்வ்வ்! :-)

said...

சின்ன வயதில் நாங்கள் இருந்த வீட்டின் உள் திண்ணையில், இரண்டு தூண்களுக்கு நடுவே உத்திரத்தின் அருகே பலகை அமைத்து குருவிகள் கூடு அமைக்க இடம் வைத்திருந்தார்கள்.
நீங்கள் சொன்ன மாதிரி விளையாட்டே அவற்றை வேடிக்கைப் பார்ப்பதாகவும் இருந்திருக்கிறது. இப்போது அவற்றைக் காண்பதே அரிதென்றாகி விட்டது:(!

நல்ல பதிவு ஆயில்யன்.

said...

பாஸ்..செம சீரியஸ் விஷயத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க..சிட்டுக்குருவியை பார்த்தே பலகாலம் ஆன மாதிரி இருக்கு பாஸ்! நல்ல பதிவு!

said...

"யானையை காண்பது கூட எளிதாக உள்ளது. மண்புழு காண்பது அரிதாகி விட்டது" என்பது போல ஒரு கவிதை படித்துள்ளேன்.மண்புழு நிலை தான் சிட்டுக்குருவிக்கும்.

said...

எங்க ஏரியா பக்கம் முருங்கை மரம் கொஞ்சம் ஜாஸ்திங்கறதால சிட்டுக்குருவி தென்படும் பாஸ்.
நாங்களும் அப்பப்ப அரிசியெல்லாம் போடறது உண்டு.

பதிவில் குறிப்பிட்டிருந்த வீடு கட்டும் முறை மாறினது, சிட்டுக்குருவி அழிவு :((((((

நல்ல பகிர்வு பாஸ்.

said...

சிட்டு குருவிகள் வெகுவாக குறைந்து வருகிறதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போதான் ஏனென்று புரிகிறது. நல்ல பதிவு.