பின்நவீனத்துவ கட்டுரைகள் எழுதுவது எப்படி? - ஜெயமோகன்

தினமணி நாளிதழை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு செய்திக்கட்டுரையை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.ஆழமாக அதை இருமுறை படியுங்கள். மேலே சொன்ன விதிகளைப் பயன்படுத்தி அதை பின்நவீனத்துவக் கட்டுரையாக ஆக்குங்கள்.

'எழுபதுகளின் இறுதியில்தான் பிராய்லர் கோழிகளை வளர்த்தல் பரவலாகியது. அரசின் ஊக்குவித்தலுடன் நாமக்கல் ஈரோடு வட்டாரங்களில் கோழிப்பண்ணை வைப்பது பெருந்தொழிலாக வளர்ந்தது. அன்றுவரை விவசாயத்தின் ஒரு பகுதியாக இருந்த கோழிவளர்த்தல் என்பது ஒரு தொழிற்சாலை உற்பத்தியாக மாறியது. இதன் விளைவாக கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை ஒப்புநோக்க மலிவாகியது. தமிழர்கள் ஞாயிறுதோறும் கோழியிறைச்சி உண்ண ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் இது வருடத்திற்கு ஒருமுறை விசேஷ தினங்களில்தான் என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். கோழிவளர்த்தல் தொழிலாக மாறி லாப நோக்கம் கொண்டபோது சுகாதார விதிகள் புறக்கணிக்கப்பட்டு தோல்தொழிற்சாலைக் கழிவுகளை கோழிகளுக்குக் கொடுத்து அவற்றை பருக்க வைத்தல், ஊக்க ஊசிகளைப் போடுதல் போன்ற முறைகேடுகள் நிகழ ஆரம்பித்தன. இதன் மூலம் சமூக ஆரோக்கியம் பாதிப்படைந்தது. அதிக புரோட்டீன் உற்பத்திமூலம் மக்கள் ஆரோக்கியம் மேம்படுதல் என்ற நிலைக்கு நேர் மாறான நிலை இது என்பதைக் காணலாம்."

இந்தப்பத்தியை பின்நவீனத்துவக் கட்டுரையின் ஒற்றை வரியாக மாற்ற ஒரே வழிதான் உள்ளது. 'எங்கிருந்தாவது தொடங்கி எப்படியோ கொண்டுபோய் எங்கோ முடித்தல்' என அதை அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள். பார்ப்போம்.

"கோழியிறைச்சி மற்றும் முட்டையின் விலையியலில் ஏற்பட்ட மலிவியல் மாற்றமானது எழுபதுகளின் இறுதிக்காலகட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதியில் கோழிப்பண்ணையியலில் ஏற்பட்ட தொழில்மயமாதல் மற்றும் பெருந்தொழிலாக்கம் மற்றும் வேளாண்மையியலாக்க நீக்கம் முதலிய பண்புக்கூறேற்றம் மற்றும் அரசுமுறை சார் ஊக்குவித்தலடிபப்டையின் நிகழ்முறை விளைவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஒரு தலைகீழாக்கமாக நிகழ்ந்த காரணத்தினால் தொழிற்சாலைத்தன்மையும் உற்பத்தியியலில் ஒட்டுமொத்தத்தமயமாதலும் நிகழ்ந்து உருவான வேளாண்மை மற்றும் பெருந்தொழில் சார் ஈரடித்தலின் விளைவாக நிகழ்ந்த நுண்குடிமை வளார்ச்சிப்போக்கு என்று சொல்லும்போது அதில் இயல்பாக குடியேறிய தொழிலியல் இலாபநோக்கின் அதீதப்பெருக்கம் காரணமாக சுகாதாரவியல் விதிகளின் புறக்கணிப்பாக்கம் நிகழ்ந்து அதன் ஊடுவிளைவாகவும் இடுபொருளியக்கமாகவும் தோல்தொழிச்சாலைக் கழிவுகளையும் [கழிவுகள் என்பவை உற்பத்தியின் பேரளவான பண்பியல் கூறுகளினால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பொருள்நிலைகளே என்று லக்கான் சொல்வதை இங்கே கணக்கில் கொள்ளவேண்டும்] மற்றும் ஊக்கமருந்துகளையும் [ ஊக்க மருந்துகள் செயற்கையாக உருவாக்கப்படும் விரிவாக்க முயற்சிகள் என்பதுடன் அவை எந்த சூழலில் எவற்றை ஊக்குவிக்க அளிக்கப்படுகின்றன, அவற்றின் உள்ளார்ந்த அரசியல் என்ன என்பதையும் ஊக்குவிக்கப்படும் கூறுகள் எவையெவற்றை அடிப்படுத்தவும் மறைக்கவும் காரணமாக உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் விரிவான நுண்ணாய்வுக்கான தரவுகள் நம் பண்பாட்டுத்தளத்தில் உள்ளுறைந்துள்ளன என்ற விஷயத்தை இங்கே விரிவாக விவாதிக்க இடமில்லையாதலால் குறிப்புணர்த்தியாகவேண்டும்] கோழிகளுக்கு அளிப்பதனூடாக அவற்றை அதிகளவிலான புரோட்டீன் உற்பத்திக்கான கருவிகளாக ஆக்கி அவற்றின் மூலம் நுகர்வியலின் அடித்தளமாக உள்ள சுவைமையில் பாரதூரமான விளைவுகளை உருவாக்கி பொதுச்சுகாதாரத்தை சீரழிக்கும்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ள கருத்தமைவென்பது அதிகபுரோட்டீன் அதிக ஆரோக்கியத்தை உருவாக்குமென்ன்ற செவ்வியல் நிலைபாடுகளின் முழுமறுப்பாக்கமும் மாற்றுக்கூற்றுகளின் தோற்றவியலுமாகும் என்ற நிலையில்….."

இவ்வண்ணம் நான்கு கட்டுரைகளை எழுதிப்பார்த்தபிறகு நீங்களே சுயமாக கட்டுரைகளை எழுதி சிற்றிதழ்களுக்கு அனுப்பலாம். அவை அச்சிடப்படாவிட்டால் சுயமாக இணையத்தில் 'கசந்தவனின் அசைவுகள்' அல்லது 'கூறிலியின் கூற்று' என்ற பேரில் வலைப்பூ தொடங்கி அவற்றை வரலாற்றில் ஏற்றலாம். தொடர்ந்து இப்படி கட்டுரை எழுத எழுத பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரிந்து ஒருமாதிரி சமநிலை கைவரும்போது நிறுத்திக் கொள்வீர்கள்.

நன்றி - ஜெயமோகன்

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற சுட்டி

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பின்நவீனத்துவம் இதுக்கு அர்த்தம் தேட ஆரம்பிச்சா மண்டை காயுது.