பாருக்குள்ளே நல்ல நாடு - தினமணியிலிருந்து :-)

பிராட்வே பஸ் நிலையம் செல்வதற்காகக் கடற்கரைச் சாலையில் காத்திருந்தேன். ""குட்டிப் பிசாசே, குட்டிப் பிசாசே'' என்ற தேவ கானம் கேட்டு திகைத்தேன். குரல் வந்த திசை யைப் பார்த்தால் ஆகாய மார்க்கம் என்று தெரிந்தது.

யட்சர்களா, கின்னரர்களா, கந்தர்வர்களா, தேவர்களா என்று அறிய பஸ் ஸ்டாப்பிலிருந்து வெளியே தலையைநிமிர்த்தி அண்ணாந்து பார்த்தால், மாநகர பஸ் கூரையில் "பாட்டும் பரதமும்' சேர்ந்த கலைவிருந்து.

மழையில் நனைந்த குருவிகளைப் போல பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் அவரவர் சீட்டில் ஒடுங்கியபடி இருந்தனர். நொடியில் புரிந்துவிட்டது, ஏதோ ஒரு கல்லூரியின் மாணவர்கள் தாங்கள் அன்றாடம் பயணம் செய்யும் பஸ்ஸýக்கும் அதன் டிரைவர், கண்டக்டர்களுக்கும் நன்றி தெரிவிக்க ""பஸ்-டே'' (நல்ல தமிழ்ச் சொல்!) கொண்டாடிக் கொண் டிருக்கிறார்கள் என்று.


அந்த நேரம் பார்த்து இரும்பு உலக்கையை காலில் போட்டது போல ஒரு வலி, யாரோ ஒரு ""முகம்மது அலி'' காலின் மீதே ஏறி துவைத்தார் போல இருந்தது. ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்தில் ஒரு ஆப்பிரிக்க வாலி பன். ""ஐயாம் ஸாரி' என்று சொல்லியபடியே என் கையைப் பிடித்து குலுக்கினான். "இட்ஸ் ஆல்ரைட்' என்று தமிழில் பதில் சொல்லும் போதே, "காலில் மிதித்ததே பரவாயில்லை, கை என்ன பாடுபடுகிறது' என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த பஸ்ஸயே அவனும் பார்த்துவிட்டு, "இது என்ன?' என்று என்னிடம் கேட்டான்.

"தமிழன் எப்போதும் நன்றி உணர்ச்சியால் கொப்பளிப்பவன். தன்னை ஆண்டு முழுவதும் சுமந்து சென்ற பஸ்க்கும் அதை இயக்கியவர்களுக்கும் மாணவர்கள், தங்க ளுக்குத் தெரிந்த வழியில் நன்றி தெரிவிக்கின் றனர்' என்றேன் பெருமிதமாக.

"அப்படியானால் பஸ்ஸில் செல்லும் மற்றவர்களுக்கெல்லாம் அந்த நன்றி உணர்ச்சி இல்லையா?' என்று எடக்காகக் கேட்டான் அந்த ஆப்பிரிக்கன்.
"இது முதலாண்டு முடிவு, இது இரண்டாம் ஆண்டு, இது கடைசி ஆண்டு என்று மாணவர்களுக்கு திட்டவட்டமாகத் தெரிகிறது கொண்டாடுகிறார்கள்; மற்றவர்கள் இன்னும் எத்தனைநாள் இந்த பஸ் பிரயாணமோ என்று வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு போவதால் கொண்டாட நேரம் இல்லை' என்று விளக்கினேன்.

"நான் இன்னொன்றையும் கவனித்தேன், மாநகர பஸ்களில் கல்லூரி மாணவர்கள் ஓடி வந்து ஏறுகிறார்கள், படிக்கட்டில் தொற்றுகிறார்கள், மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள், இதெல்லாம் உங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கண்களில் படுவதே இல்லையா?' என்று சற்று எகத்தாளமாகவே கேட்டான்.

"தமிழ் இனத்துக்கு ஒரு ஆபத்து என்றால் ஒரு நாளைக்கு 3 வேளையும் உயிரை விடக்கூடிய ""டாக்டர் தலைவர்கள்'' இங்கே நிறைய இருக்கிறார்கள்.

உலகத்திலேயே வேறு எங்கும் பார்த்திராத அளவுக்கு நிர்வாகத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தக்கூடிய தேர்ந்த அதிகாரிகள் இருக்கி றார்கள்; அவர்கள் இதையெல்லாம் சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றா நினைக்கிறாய்?' என்று கோபமாகக் கேட்டேன்.

"நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் தவறான காரியம் என்றால் பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமைவாதிகள், ம.க.இ.க.வினர், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக நீதிக்கான போர் வாள்கள் என்று எல்லோருமே அணியாகத் திரண்டு பஸ் கூரையிலேயே தனி மேடை அமைத்து எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?

"தமிழனின் இலக்கிய வரலாறு உனக்குத் தெரியாதா? அந்தக் காலத்தில் தமிழன், போர் எங்கே என்று திணவெடுத்த தோளோடு அலைவான். போரே இல்லாமல் ஆறு மாதம் "லே-ஆஃப்' என்றால் மலை முகட்டிலிருந்து கீழே குதித்து உயிரை விடுவான்.

எந்த வயதினனாய் இருந்தாலும் தலைவியைத் தேடி காதல் வயப்பட்டு கவிதையோடு செல்வான். எந்தத் தலைவியும் கிடைக்காவிட்டால் மடல் ஏறி மடிவான்' என்று பழைய வரலாறை அவனுக்குத் தெரிவித்தேன்.

அப்படியானால், தமிழர்களுக்கு தற்கொலை உணர்வு ஆரம்பகாலத்திலிருந்தே இருந்தது என்கிறீர்களா? அதன் வெளிப்பாடு தான் இந்த புட்ஃபோர்டு டிராவலா?' என்று கேட்டு எரிச்சல் ஊட்டினான்.

அவசரப்பட்டு நீயாக எதையாவது கற்பனை செய்யாதே அப்பா... ஸ்டாப்பிங்கிலிருந்து பஸ் புறப்பட்ட பிறகு வேகமா ஓடி வந்து ஏறும்போது, முரட்டுக் காளையை அடக்கிய திருப்தி எங்கள் இளைஞர்களுக் குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர் களைத்தான் பஸ்ஸில் இடது ஓரமாக உட்கா ரும் காலேஜ் பெண்கள் விரும்புகிறார்கள்.

காலையில் காலேஜுக்குப் போகும்போதே பழந்தமிழர் வாழ்க்கையின் காதலும் வீரமும் கலந்தே "டிரிப்' அடிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசறியே' என்று கோபமாகவே கேட்டேன்.

உங்க நாட்ல இதெல்லாம் கிடையாதா? என்றேன்.
"இல்லிங்க' என்றான்.

புட் ஃபோர்டு டிராவல், இலவச பஸ் பாஸ், ஸ்டாப்பிங்கைவிட்டு தள்ளி நிறுத்தறது, பீக் அவர்ல தாழ்தள சொகுசுப் பேருந்தை அனுப்பி பர்ஸ ஓட்டையாக்கிறதெல்லாம் எங்க நாட்லே இல்லை... ஏன்னா, எங்க நாட்ல பஸ்ஸ இல்லே, எல்லாமே நடை தான்' என்றான் அந்த வாலிபன்.

"அட போய்யா பரதேசி, தமிழ்நாட்டைப் பற்றி பேச வந்துட்டே' என்று ஆத்திரம் தீர திட்டிவிட்டு விடைபெற்றேன்.

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))))))))))

said...

//காலையில் காலேஜுக்குப் போகும்போதே பழந்தமிழர் வாழ்க்கையின் காதலும் வீரமும் கலந்தே "டிரிப்' அடிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசறியே' என்று கோபமாகவே கேட்டேன்.//

:-)))

ரசிக்க வைத்த பதிவு!

said...

நச்சென்று ஒரு பதிவு.

said...

படிக்க படிக்க நகைச்சுவையுடன் ஒரு தார்மீக கோவம் வந்தது..

யோவ், நம்ம பாப்புலேசன் டென்சிட்டி தெரியமா, என்றுக் கேட்க வாய் துடித்தது (என்னவா தான் இருந்தா என்ன, அதற்கேற்றார் போல் போக்குவரத்து வசதி இருக்க வேண்டாமா என்ற கேள்வியுடன்..)

கடைசியில், ஒரு திருப்பததை வைச்சிட்டிங்க..

ஆனா, தனி மனித ஒழுக்கம் இதில் முக்கிய பங்கு இருக்குது. கூட்டம் இல்லாத பேருந்திலும், ஓடித் தான் ஏறுவேன் என்பது அந்த வகையில் தான்.

said...

:))))))))))))))))))))))))

summa nachunnu iruku.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.