நீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தினமணி

நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956-ம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262-ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்ச நீதிமன்றம் அல்லது நதிநீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதிநீர் குறித்து நதிநீர் வாரியம் அமைத்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். ஆனால், இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வராததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டுக்குத்தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் பிரச்னை செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து தொடங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளம் பிரச்னை செய்து வருகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளத்தின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

கேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரிநீரைத் தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரைத் தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது.

இந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்குத் தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளம். இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல? நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வடதமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்னைகள் எழுந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான், தமிழக அரசு கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்கு முன்னோடியாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிற வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.

தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008-ல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாகச் செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகிறது.

இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாகப் பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்குப் பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. பாபநாசம் அணையில் தொடங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்தப் பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி விவசாயமும் அங்குள்ள மக்களுக்குப் பெரிதாக கைகொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும்.

அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கிறது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்துக்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும்.

ஏற்கெனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு, இப்பகுதிக்குப் பயன்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது கேரளத்தின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கிறது. இதன் வடபகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயன்படும் அழகர் அணைத் திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும்.

நதிகள் இணைப்புப் பிரச்னையில் சுற்றுச்சுழல் பிரச்னை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வடஇந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும்.

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகள் 1998-லிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்பட வேண்டிய 30 நதிகளில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்காண பீடபூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல, வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983-ல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025-ல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்துவிடும் என்றும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும்.

கடந்த 2001 காலகட்டத்திலிருந்து நிலத்தடி நீரைத் தோண்டித் தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கும் ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதிநீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.//

புதிய தகவல்!! நன்றி பதிவுக்கு.

said...

நல்ல பகிர்வு ஆயில்யன்.

//தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.//

செயல்படுத்தப் படும் கூடிய விரைவில் என நம்புவோம்.